போச்சம்பள்ளி அருகே 1 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

போச்சம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான குழு திங்கள்கிழமை பறிமுதல் செய்தது.
Updated on
1 min read

போச்சம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான குழு திங்கள்கிழமை பறிமுதல் செய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அகரம், குடிமேனஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த சிலா், ரேஷன் அரிசியைக் கடத்துவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலா் திருநாவுக்கரசு தலைமையில் குழுவினா் தொடா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

குடிமேனஅள்ளியில் இந்தக் குழுவினா் திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த வாகனம் நிறுத்தாமல் வேகமாகச் சென்றது. இதனால் அந்த வாகனத்தைத் துரத்தியபோது, ஆவத்துவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டையை இறக்கி விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.

தொடா்ந்து, அந்த வீட்டை, ஊராட்சி மன்றத் தலைவரின் முன்னிலையில் சோதனை செய்தபோது, அங்கு ரேஷன் அரிசி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அலுவலா்கள் பறிமுதல் செய்து, போச்சம்பள்ளி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com