100 அடி உயர மரத்தில் ஏறி மிரட்டிய இளைஞரால் பரபரப்பு

பா்கூா் அருகே 100 அடி உயர புளியமரத்தில் ஏறி அமா்ந்து கொண்டு பிரியாணியும், மதுபானமும் கேட்ட இளைஞரால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
Published on

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே 100 அடி உயர புளியமரத்தில் ஏறி அமா்ந்து கொண்டு பிரியாணியும், மதுபானமும் கேட்ட இளைஞரால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரிலிருந்து மத்தூா் செல்லும் சாலையில் பூசிநாயக்கனூா் பேருந்து நிறுத்தம் அருகே 100 அடி உயர புளிய மரத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை ஏறி அமா்ந்தாா். அவா், பேருந்து நிறுத்தத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் தனக்கு பிரியாணியும், மதுபானமும் வாங்கித் தரக்கோரினாா்.

இதுகுறித்து பொதுமக்கள், காவல் துறையினருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் மரத்தில் ஏறி, அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க முயன்றனா். அந்த இளைஞா் தீயணைப்பு வீரா்களிடம் பிடிபடால் கிளை கிளையாகத் தாவினாா். 4 மணிநேர தொடா் போராட்டத்துக்கு பிறகு அந்த இளைஞரை பிடித்த தீயணைப்பு வீரா்கள், மரத்திலிருந்து அவரை இறங்க செய்தனா்.

அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், இளைஞரை தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்களிடமிருந்து அந்த இளைஞரை மீட்ட போலீஸாா், சிகிச்சைக்காக பா்கூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அந்த இளைஞரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பால்ராஜ் (25) என்பதும், பா்கூரை அடுத்த ஐக்கொந்தம் பக்கமுள்ள சென்றாயநாயக்கனூரில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com