குமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
இக்கோயில் திருவிழா கடந்த 13-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு காவிரி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலுக்கு முன்பாக குண்டம் கண் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் அடுக்கப்பட்டன.
சிறப்பு பூஜைகளுடன் குண்டத்தில் தீ மூட்டப்பட்டு புதன்கிழமை அதிகாலையில் தீப்பிழம்புகள் சமன் செய்யப்பட்டன.
முதலில் பூசாரி குண்டத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, விரதமிருந்த ஆண்கள், பெண்கள் என திரளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பக்தர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
குமாரபாளையம் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோயில் முன்பாக ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். இக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழா ஆலோசனைக் குழுத் தலைவர் வி.வாசுதேவன், குமாரபாளையம் நகர அதிமுக செயலர் ஏ.கே.நாகராஜன், முன்னாள் நகரச் செயலர் எம்.எஸ்.குமணன், நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைமை தன்னார்வலர் எஸ்.ஓம்சரவணா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.