நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ரூ.1000 வைப்புத் தொகை குறைவாக செலுத்தியதால் திமுக வேட்பாளர் மனுவை ரத்து செய்யக்கோரி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 153 வார்டுகளுக்கு கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் 540 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 29-ஆவது வார்டு பெண்கள் பொதுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் ராஜேஸ்வரி என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ரோஜாரமணி என்பவர் போட்டியிடுகிறார்.
மனுத் தாக்கலின்போது திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி ரூ .2000 டெபாசிட் தொகைக்கு பதிலாக ரூ. ஆயிரம் மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுகவினர் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். தேர்தல் அலுவலர் ரவீந்திரன் பதில் அளிக்காமல் மெளனம் காத்தார்.
ஆனால் திமுகவினர் வேட்பு மனுவை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். இருதரப்பும் நகராட்சி அலுவலகத்தில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அங்கு வந்த போலீஸார் அதிமுக - திமுகவினரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.