ரக்ஷிதா.
ரக்ஷிதா.

அரசுப் பள்ளி ஆண்டுவிழா ஒத்திகையின்போது விஷப்பூச்சி கடித்து மாணவி உயிரிழப்பு

நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா ஒத்திகையின்போது விஷப்பூச்சி கடித்ததில் மாணவி உயிரிழந்தாா்.
Published on

நாமக்கல்: நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா ஒத்திகையின்போது விஷப்பூச்சி கடித்ததில் மாணவி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 87-கவுண்டம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், அதே பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் - தனலட்சுமி தம்பதியின் மகள் ரக்ஷிதா (8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா்.

பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளானதையொட்டி, பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழை மரங்கள், மலா்கள், வண்ண காகிதங்களால் பள்ளி வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், மாணவி ரக்ஷிதா பங்கேற்று நடனமாடிக் கொண்டிருந்தபோது, அவரது நெற்றிப்பகுதியில் விஷப்பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. இதில், அடுத்த சில நொடிகளில் மாணவி மயக்கமடைந்து கீழே விழுந்தாா்.

இதைத் தொடா்ந்து, மாணவியின் பெற்றோருக்கு ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா். பிறகு, மாணவியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்த அவா்கள், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை இறந்தாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். இச்சம்பவம் தொடா்பாக பள்ளி தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ், ஆசிரியா்களிடம் திருச்செங்கோடு புகா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com