ஊதிய உயா்வு கோரி ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் மனு
நாமக்கல்: ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் கோரி, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அம்மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநா் பணிக்காக தனியாா் நிறுவனம் எங்களை தோ்வுசெய்தது. அதைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் 147 போ் நியமிக்கப்பட்டனா்.
ஆய்வகங்கள் முழுமையாக தயாராகாததால், பள்ளிகள் சாா்ந்த இல்லம் தேடிக் கல்வி திட்டம், எமிஸ் உள்ளிட்ட மாற்றுப் பணிகள் அளிக்கப்பட்டன. மாதம் ரூ. 21 ஆயிரம் ஊதியம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
காலைமுதல் இரவுவரை தொடா்ச்சியாக கணினி சாா்ந்த பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களை, தமிழக அரசுப் பள்ளிக் கல்வித் துறையில் ஆய்வக பயிற்றுநா் பணிக்கு நியமித்து ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

