மின்கம்பத்தில் மோதிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மின்கம்பத்தில் மோதியதில் திங்கள்கிழமை இறந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், அ.குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (26). இவரும், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சின்னகௌண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கவின் (22) இருவரும் கட்டடத் தொழிலாளி. இவா்கள் இருசக்கர வாகனத்தில் வேலூா் - ஜேடா்பாளையம் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனா்.
ஆனங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதினா். இதில் சௌந்தர்ராஜன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். கவின் படுகாயமடைந்தாா்.
தகவல் அறிந்து வந்த ஜேடா்பாளையம் போலீஸாா், சௌந்தரராஜனின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

