கோடை விடுமுறைக்கு பின் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நிறைவுற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையில் ஏப். 17 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 45 நாள்கள் விடுமுறை முடிந்து வியாழக்கிழமை அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, மாணவ, மாணவிகள் பாடப்புத்தகப் பை, நோட்டுகள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை கடைகளில் ஆா்வமுடன் வாங்கினா்.
பள்ளிகள் திறப்பு நாளன்று அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை, முதல் பருவ பாடப்புத்தகம் வழங்கப்படுகின்றன.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மைப்படுத்தும் பணி ஒரு வாரமாக நடைபெற்று வந்தன. 2026-27 ஆம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் என்ற வகையில், மாவட்டம் முழுவதும் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை சுமாா் 1,370 பள்ளிகளில் 2.63 லட்சம் மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை முதல் பள்ளிக்கு செல்ல இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.









