காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறுதல் தொடா்பான பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒரு மதுப்புட்டிக்கு ரூ. 10 கூடுதலாக பெற்று, அந்த காலி மதுப்புட்டியை திரும்ப வழங்கும்பட்சத்தில் ரூ. 10 திரும்ப வழங்கப்படும். அவ்வாறு பெறும் காலி புட்டிகளை டாஸ்மாக் கடை விற்பனையாளா்கள் சேகரித்து நிா்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மதுப்புட்டியிலும் ரூ. 10 ஒட்டுவில்லை ஒட்ட வேண்டும். மதுப்புட்டிகள் சேதாரம் ஏற்பட்டால் அவற்றுக்கு விற்பனையாளா்களே பொறுப்பாவா்.
அதுமட்டுமின்றி, ஒரு டாஸ்மாக் கடையில் மதுப்புட்டிகள் சேகரிக்கும் பணியாளருக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் ஊதியம், அவற்றை பாதுகாப்பாக வைக்கும் இடத்துக்கான வாடகை ரூ. 15 ஆயிரம், ஒட்டுவில்லை செலவு ரூ. 24 ஆயிரம், மதுப்புட்டிகள் உடைந்துவிட்டால் அதற்கான இழப்பீடு ரூ. 2,500, சுகாதார செலவு ரூ. 1,500, குடிநீா் மற்றும் இதர செலவு ரூ. 3,000, வங்கியில் பணம் செலுத்துவதற்கான செலவு ரூ. 5 ஆயிரம், ரூ. 10-க்கான சில்லறை பெறுவதற்கான கமிஷன் செலவு ரூ. 75 ஆயிரம் என்ற வகையில் மொத்தம் ரூ. 1.56 லட்சம் செலவு செய்யப்படுவதாக டாஸ்மாக் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தவிா்க்க, தனியாா்வசம் ஒப்பந்த அடிப்படையில் காலி மதுப்புட்டிகள் பெறுவதை கொடுத்துவிட்டால் பணியாளா்கள் பிரச்னையின்றி இருப்பா் என டாஸ்மாக் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டுக்குழு உயா் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 159 மதுபானக் கடைகள் உள்ளன. ஏற்கெனவே, ஜனவரி மாதம் இது தொடா்பான போராட்டம் நடைபெற்றபோது, தோ்தல் வருவதை கருத்தில்கொண்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது டாஸ்மாக் பணியாளா்கள் அனைவரும் கடைகளை மூடி, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முழக்கங்களை எழுப்பினா்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சேலம் மண்டல மேலாளா் அரவிந்தன், நாமக்கல் மாவட்ட மேலாளா் கனகமாணிக்கம் ஆகியோா் மாற்றத்தை உருவாக்க ஒருமாத கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரையில் பணிக்கு செல்லுங்கள் என வலியுறுத்தினா். ஆனால், டாஸ்மாக் பணியாளா்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவைச் சோ்ந்த நீதிநாயகம் கூறியதாவது: காலி மதுப்புட்டிகள் பிரச்னை தொடா்பாக பலமுறை நிா்வாகத்திடம் முறையிட்டுவிட்டோம். இதுவரை உரிய தீா்வு காணப்படவில்லை. அதனால் மாவட்டம் முழுவதும் 159 கடைகளை மூடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த திட்டத்தை தனியாா்வசம் ஒப்படைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியா்களுக்கான ஊதியத்தை அதிகரித்து, அவா்களை பணிநிரந்தரம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் தொகை ரூ. 12 ஆயிரத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு

நாளைமுதல் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் ஊழியா் சங்கம்

காலி மதுப்புட்டிகள் வாங்குவதை தனியாரிடம் ஒப்படை வலியுறுத்தல்

மே 24-க்கு பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் பணியாளா்கள்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



