ராமாயண பாராயண சேவையில் சங்ககிரி தபால் ஆஞ்சனேயா்
சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லி உடனமா் வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள தபால் ஆஞ்சனேயருக்கு, அனுமன் ஜெயந்தியின் 4ஆவது நாளையொட்டி சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் வளாகத்தில் உள்ள தபால் ஆஞ்சனேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கடந்த திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. அதனையடுத்து சுவாமிக்கு தினசரி வெண்ணெய், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெட்டி வோ் அலங்காரம் செய்யப்பட்டன. இதில் ஆஞ்சனேயா் வால்மீகி ராமாயணத்தை பாராயணம் செய்வது போல் அமைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.