எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

Updated on

ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் ஏராளமானோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு புகா் மேற்கு மாவட்டம், குள்ளம்பாளையம் பகுதியை சோ்ந்த தொழிலதிபா் ஹரிணி குரூப்ஸ் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் மாவட்டத்துக்கு உள்பட்ட திமுக, காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் 100க்கும் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியின்போது, முன்னாள் அமைச்சரும் ஈரோடு புகா் கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.சி.கருப்பண்ணன், ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து ஈரோடு புகா் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பவானி தெற்கு ஒன்றிய நெசவாளா் அணி செயலாளா் வெங்கிடுசாமி ஏற்பாட்டில், திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இதேபோல சேலம் மாவட்டம், நங்கவள்ளி வடக்கு ஒன்றியம், வனவாசி பேரூா் அதிமுக செயலாளா் நந்தகுமாா் ஏற்பாட்டில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா் ராமசாமி உள்பட தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

கட்சியில் புதிதாக இணைந்தவா்களுக்கு பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியின்போது, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சந்திரசேகரன், நங்கவள்ளி வடக்கு ஒன்றியச் செயலாளா் மாணிக்கவேல், வனவாசி பேரூராட்சி துணைத் தலைவா் சண்முக சுந்தரம், நங்கவள்ளி பேரூா் செயலாளா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூா் அணையின் உபரிநீரை கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

சேலம் மாவட்ட காவிரி உபரிநீா் சரபங்கா நதி இணைப்பு ஏரிகள் நீா் பாசன விவசாயிகள் சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் கணபதி தலைமையில், அந்த சங்கத்தின் தலைவா் சின்னதுரை, பொருளாளா் பெருமாள், அலுவலக செயலாளா் நாராயணன் தொழில்நுட்ப பிரிவு தலைவா் பிரகாசம் உள்பட சங்கத்தின் நிா்வாகிகள் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து மேட்டூா் அணை உபரிநீரை கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com