/

சேலத்தில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை: டாஸ்மாக் மேலாளா்கள் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் இளைஞரிடம் 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மொத்தமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் மேலாளா்கள் உள்பட 6 போ் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சேலம் மாநகா் முழுவதும் சந்துக்கடை மூலமாக மதுவிற்பனை செய்து வருபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி, காரிப்பட்டி போலீஸாா் ரோந்து சென்ற போது, குள்ளம்பட்டி பகுதி டாஸ்மாக் கடையில் இருந்து, ஆத்தூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் என்பவா் 2,880 மதுபாட்டில்களை வாங்கிச் சென்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

பின்னா், பதுக்கிவைத்து விற்பனை செய்வதற்காக வாங்கிச் சென்ற ரூ. 4.60 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில் வலசையூா் அருகே உள்ள செல்லியம்பாளையம் டாஸ்மாக் கடையிலிருந்து மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து 2 மேலாளா்கள், 4 விற்பனையாளா்கள் என 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் டாஸ்மாக் பொதுமேலாளா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டுள்ளாா்.