/

சுற்றுச்சூழலுக்கு வித்திடும் கோயில் நந்தவனக் காடுகள் பாதுகாக்கப்படுமா?

மதுரை, அக். 31:   இயற்கையின் சூழலுக்கு வித்திடும் கோயில் நந்தவனக் காடுகள் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.  

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:48 pm

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, அக். 31:   இயற்கையின் சூழலுக்கு வித்திடும் கோயில் நந்தவனக் காடுகள் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

  கோயில் காடுகள் காடுகள் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. இயற்கை பாதுகாப்பின் அரணாக இவை விளங்குகின்றன.

  சுற்றுப்புறத்தில் இருக்கும் இயற்கையின் வளங்களான உயிரினச் சொத்துகளைப் பாதுகாக்கும் வகையில் இக்கோயில் நந்தவனக் காடுகளை நமது முன்னோர்கள் உருவாக்கி அழகு பார்த்தனர்.

  இதை தங்களது நம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் அவர்கள் ஏற்படுத்தினர். பிற்காலத்தில் நவீனக் கலாசாரமானது, வேதகால கலாசாரத்தில் புகுந்ததன் விளைவாக இந்த வகை காடுகள் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

  கோயில் வழிபாட்டு முறை ஒருபுறம் இருந்தாலும், உயிரினச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

  பல்லுயிர் பெருக்கத்தை மேலாண்மைப்படுத்தவும், பாதுகாப்பதிலும் சமயங்களுக்கு போதுமான ஆர்வம் இல்லை என்ற தவறான கருத்து உள்ளது. உண்மையில், சமய நெறிகள் இந்த பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவே பயன்படுகின்றன.

  கோயில் நந்தவனக் காடுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்பது இந்தியாவிலும் மற்றும் உலகின் சில பகுதிகளிலும் நீண்டகாலமாகவே மந்தநிலையில்தான் உள்ளது.

  கோயில்களில் நந்தவனம் எனும் பெயரில் தோட்டங்கள், பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருவது இதை பாதுகாக்கும் நோக்கில்தான்.

  இக் கோயில் காடுகள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.முத்துச்செழியன் தலைமையிலான குழு ஒன்று, மதுரை, தேனி மாவட்டங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.

  இந்த ஆய்வு குறித்து முத்துச்செழியன் கூறியதாவது:

  இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கோயில் காடுகளும் மற்றும் கோயில் தோட்டங்களும் உள்ளன. நாட்டில் சுமார் 4,215 கோயில் காடுகள், 39,063 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

  பெரிய அளவிலான "மாவ்பிளாங்க்' கோயில் நந்தவனக் காடுகள் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் அருகே உள்ளன.

  இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகமான கோயில் நந்தவனக் காடுகளும் உள்ளன. தமிழகத்தில் 275 சிவ தலங்களிலும், 108 வைணவத் தலங்கள் உள்பட மொத்தம் 383 புனித ஸ்தலங்கள் உள்ளன இக் கோயில்களில் "ஸ்தல விருட்ச'மாக கோயில் நந்தவனக் காடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

  மதுரை, தேனி மாவட்டங்களில் மேற்கொண்ட எங்களுடைய ஆய்வின்படி பல்லுயிர் பெருக்கத்திற்கு தெய்வங்களுடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட ஸ்தல விருட்சங்கள் உள்ளன.

  மதுரை காமராஜர் பல்கலையில் உள்ள பல்லுயிர் மற்றும் வனப் படிப்பு மையம் மூலம் அழிவின் அபாயத்தில் உள்ள தாவர இனங்களைப் பாதுகாக்க ஓர் இடத்தை உருவாக்கி அதில் ஒவ்வொரு கோயிலுக்கும் உகந்த ஸ்தல விருட்சங்களை அளிக்கத் தயாராக உள்ளோம்.

  பருவநிலை மாற்றம் ஏற்பட்டுவரும் இச் சூழலில் கோயில் காடுகள் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.