ராம நா த புரம், ஏப். 4: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களும் 9,500 உறுப்பினர்களும் உடைய ராமநாதபுரம் மாவட்ட மைய நூலகம் துவங்கப்பட்டு, 52 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் போதுமான இடவசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
சுமார் 5,000 நூல்களுடன் 1958-ல் ராமநாதபுரம் நகரின் வடக்குத் தெருவில் துவங்கப்பட்ட இந்த நூலகம் தொடர்ந்து 40 ஆண்டுகளாக நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்தது. பின்னர் 1992-ல் ராமநாதபுரம் மாவட்டத் தலைமை நூலகமாக மாறியது.
ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கம், தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட சமுக நல அமைப்புகளின் மூலமாகவும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் விஜயகுமார் முயற்சியாலும் 2003-ம் ஆண்டு ராமநாதபுரம் பாரதி நகர் டி.பிளாக் பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 சென்ட் நிலம் பெறப்பட்டு, 2004 முதல் சொந்தக் கட்டடத்தில் மாவட்ட மைய நூலகமாக செயல்பட்டு வருகிறது.
இம் மைய நூலகத்துடன் 46 கிளை நூலகங்கள், 20 ஊர்ப்புற நூலகங்கள், 14 பகுதி நேர நூலகங்களும் இணைந்து செயல்படுகின்றன. பதிப்பகங்களில் இருந்துவரும் நூல்களை மற்ற நூலகங்களுக்கு பகிர்மானம் செய்யும் பணியும் இங்கு நடந்துவருகிறது.
இந்த நூலகத்துக்கு ஆகும் செலவுகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பெறப்படும் நூலக வரி மூலமாகவே செலவிடப்படுகிறது. கொல்கத்தாவில் உள்ள ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை மூலமாகவும் நூல்கள் மற்றும் தளவாடங்களுக்குரிய நிதியுதவி பெறப்படுகிறது.
சுமார் 52 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்நூலகத்தில் பொது அறிவு நூல்கள், நாவல்கள், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் உள்பட சுமார் ஒரு லட்சம் நூல்களை உள்ளடக்கிய அறிவுச் சுரங்கமாகவும் இருந்து வருகிறது.
நூலின் பெயரைச் சொன்னால் கணினி மூலம் அதைத் தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவோருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓர் அமுதசுரபியாகவும் இருக்கிறது.
வருடந்தோறும் நூலக வார விழாவும் வாசகர் வட்டமும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையில் நூலகம் வரும் மாணவர்களுக்காக பரிசு வழங்கும் திட்டத்தையும் இந்நூலகம் செயல்படுத்தி வருகிறது.
இப்படியாக பல்வேறு வசதிகளை உடைய இந்நூலகத்தில் புத்தகங்களை அடுக்கிவைக்க போதிய இடவசதி இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம். முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ள இந்த நூலகத்திற்கு வந்து கொண்டிருக்கிற பல்வேறு வசதிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க முடியாத நிலையில் போதுமான இடவசதி இல்லை.
இதுகுறித்து மாவட்ட மைய நூலகர் நித்யானந்தம் கூறியதாவது: மைய நூலகத்தில் 8 கணினிகளுடன் கூடிய இணையதள வசதி உள்ளது. குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதுதில்லி தேசிய நூலகத்தில் உள்ள நூல்களை இங்கிருந்து கொண்டே இணையதளம் மூலம் படிக்கும் வசதியும் வரவுள்ளது. முதியோர்களுக்கென்று தனிப்பிரிவு துவங்க முடிவுசெய்தும் போதிய இடவசதி இல்லை.
சிறுவர்கள், மகளிர்க்கென்று துவங்கிய தனிப் பிரிவையும் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. கட்டடம் கட்ட நூலகம் அருகிலேயே போதுமான இடம் இருந்தும் கட்டடம் கட்டுவதற்கு நிதி இல்லை.
போதிய கட்டட வசதி இருந்தால் தான் வந்து கொண்டிருக்கிற பல்வேறு
வசதிகளையும் தங்கு தடையின்றி வாசகர்களுக்கு வழங்கிட முடியும்.
இதுவரை ரூ.1000 செலுத்தி புரவலர்களாக 85 பேர் சேர்ந்துள்ளனர். ரூ.5,000 செலுத்தி பெரும் புரவலர்களாகவும் இணைந்து கொள்ளலாம். கட்டடம் கட்டித்தர விரும்பும் செல்வந்தர்கள் தங்களது பெயரையும் அவர்களது நினைவாக அக்கட்டடத்திற்கு வைத்துக் கொள்ளலாம்.
கலைமகள் வாழும் ஆலயமாக விளங்கும் நூலகத்தின் மூலம் அழியாத கல்விச் செல்வத்தை அனைவருக்கும் வழங்கிட வர்த்தக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், செல்வந்தர்கள் முன்வர வேண்டும் எனவும் நித்யானந்தம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.