/

திட்ட நிதியை எதிர்நோக்கி இடைநிலை கல்வித் திட்டம்!

மதுரை, டிச. 12:           அனைவருக்கும் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தில் 2010-11-ம் ஆண்டுக்கான நிதி கோரி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் முன்மொழிவுத் திட்ட அறிக்கை தமிழக கல்வித் துறை சார்பில் அளிக்கப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:24 am

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, டிச. 12:           அனைவருக்கும் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டத்தில் 2010-11-ம் ஆண்டுக்கான நிதி கோரி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் முன்மொழிவுத் திட்ட அறிக்கை தமிழக கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்டு, இரு மாதங்களாகவிட்ட நிலையில் இன்னும் நிதி கிடைக்காத நிலை உள்ளது.

    நாட்டில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றலை அறவே போக்கும் வகையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது போன்று, உயர்நிலை அளவில் அனைவருக்கும் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டம்  (ராஷ்ட்ரீய மத்தியமிக் சிக்ஷா அபியான்) கொண்டுவருவது பற்றி 2007-ம் ஆண்டில் சுதந்திர தின உரையின்போது பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.

    11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்காக மத்திய அரசு சார்பில் மொத்த செலவாக ரூ.35,566.62 கோடியும், 2020-ம் ஆண்டுக்குள், ரூ.90485.11 கோடியும்  அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும் 7-10 கி.மீட்டர் தூரத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளியை அமைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் உயர்நிலைப் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் சேர்க்கையை உருவாக்குவது, 2020-ம் ஆண்டுக்குள் மேல்நிலைக் கல்வியில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை உருவாக்குவதும்தான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.   

  2005-06-ம் ஆண்டிலிருந்த 52.26 சதவீத மாணவர் சேர்க்கையை 2011-12-ம் ஆண்டுக்குள் 75 சதவீதமாக உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்

44 ஆயிரம் பள்ளிகளை வலுப்படுத்துவது, 11,118 உயர் தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவது, 2.55 லட்சம் கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவற்றின் மூலம் 2011-12-ம் ஆண்டுக்குள் உயர்நிலை அளவில் மாணவர் சேர்க்ûகையை 75 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைத் திட்ட அலுவலராகவும், அவருக்குக் கீழ் உதவி கூடுதல் திட்ட அலுவலர், கல்வி மாவட்ட அளவில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டத்தில் இரு ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   இத்திட்டம் கடந்த ஆண்டு தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் 4 பிரிவுகளுக்கு மட்டுமே சுமார் ரூ.151 கோடி அளிக்கப்பட்டது. அதுவும் இந்தாண்டு மார்ச் மாதத்தில்தான் இந்தத் தொகை வழங்கப்பட்டதால் நிதியைச் செலவிடுவதற்கான பணிகள் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டன.

   இந்நிலையில், 2010-11-ம் ஆண்டுக்கு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இத் திட்டத்தைச் செயல்படுத்திட சுமார் ரூ.1400 கோடி வரை கேட்டு மத்திய மனித வள அமைச்சகத்திடம் தமிழகத்தின் சார்பில் வரைவு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்எம்எஸ்ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

     இப்பணிக்கான வரைவு அறிக்கைகள் தயாரித்து சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் ஆர்எம்எஸ்ஏ அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கிருந்து மனிதவள மேம்பாட்டுத் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் உயர்நிலைக் கல்வியை அளிப்பது என்ற நோக்கில் நடுநிலைப் பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அவற்றில் தேவையான பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறை வசதி, அலுவலக அறைகள் அமைத்தல்,

ஆசிரியர், பணியாளர்களை நியமித்தல், கூடுதல் வகுப்பறைகள், நூலகங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக இத் திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் 37 பள்ளிகளைத் தரம் உயர்த்தவும், தேவையான கட்டடங்களை அமைப்பதற்கும், ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 2010-11-ம் ஆண்டுக்கு ரூ.87 கோடி வரை கோரப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  ஆனால், திட்டப் பணிக்கான வரைவு அறிக்கையைத் தயாரித்து அனுப்பிய பிறகும் திட்ட நிதி இன்னும் கிடைக்கவில்லை. சில மாநிலங்கள் இன்னும் வரைவு அறிக்கையை தாக்கல் செய்யாததால் இந்த தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

  இதுகுறித்து ஆர்எம்எஸ்ஏ திட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நிதி தொடர்பான வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள அமைச்சகம் விரைவில் ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து முடிவு எடுக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.