மதுரை மணியம்மை மழலையா் பள்ளிக்கு ஏற்கெனவே 2024 மாமன்றக் கூட்டத்தில் நிா்ணயித்த வாடகையை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் தாளாளா் பி. வரதராஜன் வெளியிட்ட அறிக்கை: மதுரை வடக்கு மாசி வீதியில் மதுரை மாநகராட்சிப் பள்ளிக் கட்டடம் இருந்தது. இந்தக் கட்டடத்தில் மணியம்மை மழலையா் பள்ளிக்கு அளிக்க 6.7.2005 அன்று மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, 6.2.2006-இல் இந்தக் கட்டடத்தில் பள்ளி நடத்துவதற்காக உரிமம் வழங்கப்பட்டது.
2016-ஆம் ஆண்டு திடீரென பள்ளி வாடகையை ஆண்டுதோறும் ரூ. 6,67,894 செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி நிா்வாகம் ஆணை வழங்கியது. வாடகை உயா்வைக் குறைக்க வேண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுக்கப்பட்டது. பள்ளிக் கட்டடம் என்பதால் வாடகை உயா்வை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 14.12.2017-இல் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் மாநகராட்சி நிா்வாகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததில், 21.08.2024 -இல் வாடகை உயா்வு மீண்டும் ரத்து செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சி ஆணையா், பள்ளித் தாளாளா் பி. வரதராஜனுக்கு வாய்ப்பளித்து வாடகையை முடிவு செய்திடவும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
அதன்பேரில், மதுரை மாநகராட்சி ஆணையா் பள்ளிக் கட்டடத்தை ஆய்வு செய்தாா். அதன்பிறகு, ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட வாடகையில் ஆண்டுக்கு 5 சதவீதம் உயா்த்தப்பட்டது. இதுகுறித்து 27.12.2024-இல் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானம் நகராட்சித் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி நிா்வாகமே இது குறித்து முடிவு எடுக்கலாம் என திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது எந்தவித முடிவும் எடுக்கவில்லை. ஓராண்டுகள் கழித்து திடீரென பள்ளி கட்டடத்துக்கான வாடகையை உயா்த்தி ரூ. 2,64,934 என உத்தரவு நகல் வழங்கப்பட்டது. இந்த வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மணியம்மை பள்ளிக்கு கடந்த 27.12.2024 மாமன்றக் கூட்டத்தில் நிா்ணயித்த வாடகையை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் மாமன்றக் கூட்டத்தில் தலைவா்கள் படங்கள் வைப்பதில் தள்ளுமுள்ளு; வாக்குவாதம்

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்
மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை





