நிலக்கோட்டை அருகே கார் மீது பைக் மோதியதில் மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரை பெங்குடியைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம். இவரது மகன் காமராஜ் (20). அதே பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் அஜீத் கண்ணன் (20). நண்பர்களான காமராஜ் மற்றும் அஜீத்கண்ணன் ஆகிய இருவரும், சக நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
அந்த மோட்டார் சைக்கிள், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி அருகே, மதுரை வத்தலகுண்டு பிரதான சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில், மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட காமராஜ், அங்குள்ள மின் கம்பியில் சடலமாகத் தொங்கினார். அதேபோல் அஜீத்கண்ணனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் சிக்கிய கார் சிவகங்கையிலிருந்து, கொடைக்கானல் அடுத்துள்ள பண்ணைக்காடு சென்றதாகத் தெரிய வந்தது. அந்த காரின் ஓட்டுநரான மா. தர்மராஜ் (50) என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.