கலாம் நினைவிடத்துக்கு கமல்ஹாசன் வந்ததை அரசியலாக்க வேண்டாம்: கலாம் பேரன் ஷேக்சலீம்

அப்துல்கலாமின் நினைவில்லத்துக்கு கமல்ஹாசன் வந்து சென்றதை அரசியலாக்க வேண்டாம் என கலாமின் பேரன் ஷேக்சலீம் வேண்டுகோள் விடுத்தார்.
Updated on
1 min read

அப்துல்கலாமின் நினைவில்லத்துக்கு கமல்ஹாசன் வந்து சென்றதை அரசியலாக்க வேண்டாம் என கலாமின் பேரன் ஷேக்சலீம் வேண்டுகோள் விடுத்தார்.
 மதுரை அருகே ஒத்தக்கடையில் புதன்கிழமை நடைபெற்ற கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்' கட்சித் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
 கலாம் நினைவில்லத்துக்கு கமல்ஹாசன் வந்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை அரசியல் நோக்கத்துடன் பார்க்காதீர்கள். வளர்ச்சியை மட்டும் பாருங்கள். அனைவரும் அரசியல் பாகுபாடின்றி நல்லவற்றுக்காக கலந்துபேசலாம். அதையே இளைஞர்கள் விரும்புகிறார்கள். வளர்ச்சியான தமிழகத்தையே அனைவரும் விரும்புகிறார்கள் என்றார்.
 விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியது: தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்ட நிலையில், கமல்ஹாசன் மக்களுக்கான இயக்கத்தை தொடங்கியுள்ளார். உரிமைகள் பறிபோயுள்ள தமிழகத்தினை தலைநிமிரச் செய்யும் வகையில் கமல்ஹாசன் செயல்படுவார் என்றார்.
கவிஞர் சினேகன் பேசியது: கமல்ஹாசனின் கனவை நனவாக்க விமர்சனங்கள் வராத வகையில் தொண்டர்கள் செயல்படவேண்டும். சாதி, சமயம், கட்சி எனப் பிரித்து பார்க்கும் தமிழக மக்களை மொழி, அன்பால் கமல்ஹாசன் இணைத்துள்ளார். காந்தி தொண்டராக உள்ள கமல், நேதாஜியாகவும் மாறத்தெரிந்தவர் என்றார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாரதி கிருஷ்ணகுமார்:  தாய் மொழி தினத்தன்று கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் மாற்றத்துக்கான அரசியல் விதையை விதைத்துள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com