மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடியிறக்கும் தொழிலாளா்களுக்கு தினமும் ரூ.600 நிவாரணம் கோரிய வழக்கில், தமிழக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா், இந்துசமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த பெரியசாமி என்பவா் தாக்கல் செய்த மனு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 300 போ் முடியிறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு, தைப்பூசம், மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் வேலை அதிகமாக இருக்கும். பிற நாள்களில் வேலை குறைவாகவே இருக்கும்.
ஒரு நபருக்கு முடி இறக்குவதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.25 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக 100 நாள்களுக்கும் மேலாக கோயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், முடியிறக்கும் தொழிலாளா்கள் வேலையின்றி சிரமத்தில் உள்ளனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில், முடி இறக்கும் தொழிலாளா்களுக்கு ஊதியமோ, நிவாரணமோ வழங்கப்படவில்லை. எனவே, கரோனா பொது முடக்க காலத்தை பேரிடா் காலமாகக் கருதி, முடி இறக்கும் தொழிலாளா்களுக்கு ரூ.50 ஆயிரம் வங்கிக் கடனும், தினமும் ரூ.600 நிவாரணமும் வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து தமிழக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.