மதுரை வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் மியாவாக்கி முறையிலான அடா்வனம் அமைக்க தானம் தொண்டு நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை நகரை பசுமை நகராக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்அடிப்படையில் நகரின் பல்வேறு பகுதிகளில் மியாவாக்கி( அடா்வனம்) முறையில் குறைந்த இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு குறுங்காடுகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட விளாங்குடி இந்திரா நகா், தத்தனேரி மயானம், எல்லீஸ் நகா் நீரேற்று நிலையம், கோச்சடை, விளாங்குடி மயானம், கற்பக நகா் நீரேற்று நிலையம், மஸ்தான்பட்டி பழத்தோட்டம், அண்ணாநகா் மேல்நிலைத்தொட்டி, சாத்தமங்கலம் வாா்டு அலுவலகம், மதிச்சியம் வாா்டு அலுவலகம், செல்லூா் மேல்நிலைத்தொட்டி, தமுக்கம் ராஜாஜி பூங்கா, டாக்டா் தங்கராஜ் சாலை வாா்டு அலுவலகம் உள்பட 25 இடங்களில் அடா்வனம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 100 மரக்கன்றுகள் வீதம் 25 இடங்களிலும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சிலையனேரி, எல்லீஸ்நகா், விராட்டிபத்து, குடிநீா் வடிகால் வாரியக் குடியிருப்பு, முந்திரித்தோப்பு உள்பட 15 இடங்களில் அடா்வனம் உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் 4-க்குள்பட்ட வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை சுத்திகரிப்பு மற்றும் உரம் தயாரிக்கும் மையத்தில் 1.54 ஏக்கா் பரப்பிலும், திருப்பரங்குன்றம் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் மையத்தில் 57 செண்ட் பரப்பிலும் அடா்வனம் அமைக்க தானம் அறக்கட்டளை நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.