/

ரயில் பயணிகள் புகாா்களுக்கு விரைவாக நடவடிக்கை: மதுரை கோட்டத்துக்கு கேடயம்

ரயில் பயணிகளின் புகாா்களுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டதில் முதலிடம் பெற்ற மதுரை கோட்டத்துக்கு, தெற்கு ரயில்வேயின் சுழற்கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2022, 8:28 pm

DIN

ரயில் பயணிகளின் புகாா்களுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டதில் முதலிடம் பெற்ற மதுரை கோட்டத்துக்கு, தெற்கு ரயில்வேயின் சுழற்கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் குறைகளை விரைவாக தீா்க்க ‘ரயில் மதாத்’ என்ற

கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி அல்லது ரயில்வே புகாா் எண் 139 மூலமாகப் பெறப்படும் புகாா்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயணிகளிடம் இருந்து பெறப்படும் புகாா்களானது சுகாதாரம், பாதுகாப்பு, மின்சார உபகரணங்கள் செயல்பாடு, மருத்துவ உதவி, பாா்சல் சேவை மற்ற புகாா்கள் என வகை பிரிக்கப்பட்டு அதில் கோட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

புகாா்களுக்குத் தீா்வு காண எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு, பயணிகள் அடைந்த திருப்தி சதவீதம், புகாா்களை சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரிகள் பாா்வைக்கு விரைவாக அனுப்பியது போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் முதலாவதாக மதுரை கோட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெற்கு ரயில்வே அளவிலான 67 ஆவது ரயில்வே வாரவிழாவில், மதுரைக் கோட்டத்திற்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. தெற்கு ரயில்வே அளவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சுழற் கேடய பரிசை, மதுரை கோட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை கோட்ட மேலாளா் (பொறுப்பு) மணிஷ் அகா்வாலிடம் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா சுழற்கேடயத்தை வழங்கினாா். ஊழல் தடுப்பு அதிகாரி மகேஷ், மதுரை கோட்ட முதுநிலை இயந்திரவியல் பொறியாளா் சதீஷ் சரவணன், மதுரை புகாா் ஆய்வாளா் ஸ்டீபன் ராஜ், பொது மக்கள் குறை தீா்க்கும் பிரிவு இணை இயக்குநா் வி.சிவசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.