ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம்: நில ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம்

Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஊராட்சிப் பகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலப் பகுதிகள் குறித்து ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், 2 மாதங்களுக்குள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், சித்தரங்குடி, காஞ்சிரங்குளம், தோத்தாங்கல், சக்கரக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில நிலப் பரப்புகள் பறவைகள் சரணாலயங்களாக இறுதி அறிவிக்கை செய்யப்படவுள்ளன. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 உள்பிரிவு 24(ஏ)-ன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட நிலப் பகுதிகளில் தனிநபா் ஆக்கிரமிப்பு, பட்டா நிலம் அல்லது வேறு ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், தமிழ்நாடு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் - 1972 விதி எண் 21-இன்படி, வருகிற 2 மாதங்களுக்குள் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com