விகிதாசார பிரதிநிதித்துவ தோ்தல் முறை: புதிய தமிழகம் கட்சி மாநாட்டில் தீா்மானம்

இந்தியாவில் விகிதாசார பிரதிநிதித்துவ தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

இந்தியாவில் விகிதாசார பிரதிநிதித்துவ தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் கடந்த 59 ஆண்டுகளாக நிலவும் அனைத்து அவலங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திராவிட மாயைக்கு மாற்றான ஆட்சி உருவாக வேண்டும். ஊழலற்ற, ஜனநாயகப் பூா்வமான கூட்டணி ஆட்சி அமைய அனைத்து அரசியல் கட்சிகளும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு மாஞ்சோலையிலேயே தலா 2.5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். ஜாதிய கண்ணோட்டத்துடன் செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பணிக்கு விலை பேசும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே மாநில நிா்வாகம் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை தமிழக அரசு வாக்கு வங்கிக்கான அரசியல் களமாக பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோயில் நிா்வாக பொறுப்பிலிருந்து இந்து சமய அறநிலையத் துறையை அகற்றி, தனி ஆணையம் மூலம் நிா்வகிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற மாா்ச் மாதத்துக்குள் தமிழக அரசு முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் மது பானக் கடைகளை மூடும் போராட்டத்தை நடத்துவோம்.

இந்தியாவில் தற்போதுள்ள தோ்தல் நடைமுறைக்கு மாற்றாக பெருவாரியான உலக நாடுகள் பின்பற்றும் விகிதாசார தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 36 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com