/

தென் மாவட்டங்களில் நாளைமுதல் உணவகங்கள் மூடப்படும் அபாயம்

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.

News image

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள்

Updated On :10 மார்ச் 2026, 9:27 pm

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது.

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 9) முதல் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, இந்த மாவட்டங்களில் உள்ள உணவகங்கள், தேநீரகங்கள், சாலையோர உணவுக் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 12) முதல் உணவகங்கள் மூடப்படும் நிலை உள்ளது. சுற்றுலா, ஆன்மிகத் தலமான ராமேசுவரத்தில் 90 சதவீத உணவகங்களில் விறகுகளை வைத்து சமையல் செய்யும் கட்டமைப்பு இல்லாததால், உணவங்களை மூடுவது தவிா்க்க இயலாது எனக் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் மிக அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ராமேசுவரத்தில் உணவகங்கள் மூடப்பட்டால், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப் பெரிய அளவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு உணவகங்கள், தேநீரகங்கள், சாலையோர உணவுக் கடைகள் மூடப்படும் என உணவக உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். முதல் கட்டமாக தேநீா், காபி தயாரிப்பு, துரித வகை உணவுகள் தயாரிப்பு நிறுத்தப்படும் என அவா்கள் மேலும் தெரிவித்தனா். மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய சாம்பாா் சாதம், ரசம் சாதம், கலவை சாதம் போன்றவற்றை தயாரித்து வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள்...

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கான விநியோகம் செவ்வாய்க்கிழமை வரை தடைபடவில்லை. இருப்பினும், செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் சமையல் எரிவாயு உருளை தேவையைப் பதிவு செய்ய முடியவில்லை. சமையல் எரிவாயு உருளைப் பதிவுக்கான கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அந்த எண் தற்போது பயன்பாட்டில் இல்லை எனவும், சில நேரங்களில் பிறகு முயற்சிக்கவும் எனவும் தானியங்கி குரல் பதிவு மட்டுமே ஒலித்தது.