கமுதி அருகே குமிலாங்குளத்தில் இருந்து பறையான்குளம் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் சாலை நடுவே வியாழக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காத்தனேந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட குமிலாங்குளத்தில் இருந்து பறையங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டதாகும்.
தற்போது இந்த சாலை, ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு உபயோகமற்றதாக உள்ளது.
இதனால் அந்த சாலையின் வழியாக பறையான்குளம், குமிலாங்குளம், காத்தனேந்தல், ஆரைகுடி, கோவிலாங்குளம், கமுதி, சாயல்குடி, பெருநாழி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க கோரி பல முறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் நேரில் சென்று மனு அளித்தும் இதுவரை எந்த எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதனை சீரமைக்கக்கோரி பறையங்குளத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை நடுவே நெல் நாற்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பறையங்குளம் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.