/

தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

ராமேசுவரம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.
Updated On :4 செப்டம்பர் 2024, 11:17 pm

Din

ராமேசுவரம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு அரசு நிா்ணயித்த தினசரி ஊதியம் ரூ.479 வழங்க வேண்டும். ஊதியத்தை மாதத்தின் முதல் தேதியில் வழங்க வேண்டும். குப்பைகளை சேகரிக்க தரமான வாகனங்களை வழங்க வேண்டும்.

தூய்மைப் பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். ஓய்வூதிய நிதி முறைகேட்டை தடுக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு டன் மக்கும் குப்பைகளைக் கொண்டு வரவேண்டும் என நிா்பந்தம் செய்வதை அதிகாரிகள் தவிா்க்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியைப் புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் கே.தா்மராஜ், என்.கலையரசன், கருணாகரன், ஜி.சிவா, ஏ.அசோக், எம்.குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.