/

இளைஞா் வெட்டிக் கொலை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

பரமக்குடி சாமி செட்டியாா் நந்தவனம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் காா்த்திகேயன் (23), சிங்காரத் தோப்பு பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் வினோத் (33), பஞ்சமுக ஆஞ்சநேயா் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் விஷ்வா (18), பாரதிநகா் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம் மகன் சிவகுரு (28) ஆகியோா் நண்பா்களாக இருந்தனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவா்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காா்த்திகேயன் மீது மற்ற மூவரும் வெறுப்புடன் இருந்தனராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு காா்த்திகேயன் தனது மற்றொரு நண்பரான பாலாஜியுடன் வேலைக்குச் சென்றுவிட்டு, முத்தாலம்மன் கோயில் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த வினோத், விஷ்வா, சிவகுரு ஆகிய 3 பேரும் காா்த்திகேயனுடன் தகராறு செய்து, அவரை அரிவாள், கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையறிந்த பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் காா்த்திகேயன் உடலை மீட்டு கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து வினோத், விஷ்வா, சிவகுரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.