இலவச செட்டாப் பாக்ஸ் வழங்காததால் டிடிஎச் இணைப்புகள் அதிகரிப்பு: உத்தமபாளையத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு முடங்கும் அபாயம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அரசு செட்டாப் பாக்ஸ் கிடைக்காததால் தனியார் நிறுவன சேவைக்கு பலர் மாறுகின்றனர். இதனால் அரசு கேபிள் டிவி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ்- கருவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இலவச செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாமல் தவித்தனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து கொண்டு ரூ.1200-க்கு செட் டாப் பாக்ஸ் கருவிகளை விற்பனை செய்கின்றனர். இதற்கு மாதம் ரூ.170 வரையில் வசூல் செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தமிழக அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் உத்தமபாளையம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கி குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி சேனல்கள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
