தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10.90 லட்சம் பணத்தை, தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள தேவதானப்பட்டி பகுதியில், பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 2000, ரூ. 500, ரூ. 200 ஆகிய நோட்டுக் கட்டுகள் மொத்தம் ரூ.10.90 லட்சம் எந்தவித ஆவணங்களின்றி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், தேனி அருகே பி.சி. பட்டியைச் சோ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் வீரா் செந்தில் (49) மற்றும் அவரது மனைவி கனிமொழி (45) என்றும் தெரியவந்தது.
இவா்கள் இருவரும், கோவையில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்துச்செல்வதாகத் தெரிவித்தனா். ஆனாலும், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.
அதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.90 லட்சம் பணத்தை பெரியகுளம் சாா்-நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.