கம்பம் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் கோயில் நிர்வாகத்தைக் கண்டித்து திங்கள்கிழமை கோட்டையைச் சுற்றி வீடுகள், கடைகள் கட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், கம்பத்தின் மையப்பகுதியில் உள்ளது கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் கோயில். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் 10 ஏக்கர் 10 சென்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேலானோர், வீடுகள், கடைகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். தற்போது இந்து அறநிலையத்துறை வீடு மற்றும் கடைகளின் வாடகையை உயர்த்தி வசூலிக்க அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் கோட்டையைச் சுற்றி வீடுகள், கடைகள் கட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவில் நிர்வாகத்திடம் தரை வாடகை வசூலிக்க வேண்டும், பெயர் மாற்றம், பராமரிப்புப் பணிகள் செய்ய அனுமதி, வாடகையை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
தகவல் கிடைத்ததும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.லாவண்யா போராட்டம் நடத்தியவர்களிடம் மனு கொடுப்பது மட்டும் தான் மற்றபடி தரையில் அமர்ந்து, கோஷமிட்டு போராட்டம் செய்யக்கூடாது என்று கூறினார். இதனால் போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கோயில் நிர்வாக அலுவலர் போத்தி செல்வியிடம் ஆய்வாளர் ஆர்.லாவன்யா செல்லிடப்பேசியில் பேசி போராட்டக்காரர்களிடம் மனுவை பெற்று செல்லுமாறு கூறினார். அப்போது நிர்வாக அலுவலர் தான் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், கம்பம் கோயிலுக்கு வர இயலாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க- உ.பி. வன்முறை: நாடு முழுவதும் நாளை(அக்.5) காங். ஆர்ப்பாட்டம்
இதனால் ஆத்திரமடைந்த சங்கத்தினர் நிர்வாக அலுவலரைக் கண்டித்து மீண்டும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பழைய நிர்வாக அலுவலர் போத்தி செல்வி போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து மனுவை பெற்றுகொண்டார். இதுபற்றி நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது குடியிருப்போர் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்தார்.