பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வர் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 17-ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தினை முன்னிட்டு இன்று இராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கோயில் எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் சசி, சிதம்பர சூரியவேலு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மார்ச் 10-ம் தேதி வியாழக்கிழமை முதல் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை பஞ்சமூர்த்திகள் வீதி உலா மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. மார்ச் 17-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.