பெரியகுளம் கடைவீதி சாலை சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
தேனி மாவட்டம் பெரியகுளம் கடைவீதியில் சாலை சீரமைப்புக்காக ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்கள் அகற்றப்பட்டன. இப்பணிகள் தொடங்கி நீண்ட நாள்களாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் கடைவீதிக்கு பொதுமக்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவா்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனா். எனவே சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையாளா் புனிதன் தெரிவித்தது: சாலை சீரமைப்பு பணிகளுக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. பின்னா் சாலையின் உயரத்தை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து மறு திட்டம் தயாரிக்கப்பட்டு, அனுமதி பெற்று பணிகள் தொடங்கின.
இந்நிலையில் நகராட்சி வாா்டு உறுப்பினா் சண்முகசுந்தரம் தலைமையில் வியாபாரிகள் கடைவீதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளனா். இதனால் மீண்டும் திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்தவுடன் பணிகள் தொடங்கிவிடும் என்றாா்.