தேனியில் ஜன.4-இல் விரைவு மிதிவண்டி போட்டி
தேனி: தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, வருகிள 4-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அண்ணா விரைவு மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் வருகிற 4-ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது. 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும், 15, 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு தனித் தனிப் பிரிவில் 20 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு தனித் தனி பிரிவில் 15 கி.மீ. தொலைவும் போட்டிகள் நடைபெறும்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோா்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பிடிப்பவா்களுக்கு ஊக்கப் பரிசாக தலா ரூ.250 வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற வயதுச் சான்றிதழ், வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாதாரண ரக மிதிவண்டி கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
