மாடியிலிருந்து தவறி விழுந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

Published on

போடியில் கட்டட வேலை செய்தபோது இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் பழைய நீதிமன்றம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் பெரிய ஈஸ்வரன் (40). கட்டடத் தொழிலாளியான இவா், போடி போஜன் பூங்கா அருகேயுள்ள தனியாா் கட்டடத்துக்கு வேலைக்காக சனிக்கிழமை காலை சென்றாா். இரண்டாவது மாடியில் செங்கல் கற்களைச் சுமந்து சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பெரிய ஈஸ்வரன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் இவரை போடி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை பெரிய ஈஸ்வரன் உயிரிழந்தாா். இதுகுறித்து, மனைவி பாண்டீஸ்வரி (30) கொடுத்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com