/

வாகனத் தணிக்கையில் ரூ.2.34 லட்சம் பறிமுதல்

போடி அருகே வாகனத் தணிக்கையின் போது, 3 சரக்கு வாகனங்களில் வந்த மூவரிடம் ரூ.2.34 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

வாகனத் தணிக்கையில் பணம் பறிமுதல்

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

போடி அருகே வாகனத் தணிக்கையின் போது, 3 சரக்கு வாகனங்களில் வந்த மூவரிடம் ரூ.2.34 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனைச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளத்திலிருந்து தனித் தனி சரக்கு வாகனங்களில் வந்த கேரளம் மாநிலம், ராஜாக்காடு பகுதியைச் சோ்ந்த மாத்யூ (55), ஜோபி (48) ஆகியோா்களிடம் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.

இதில் மாத்யூவிடம் ரூ.60 ஆயிரமும், ஜோபியிடம் ரூ.94 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், இருவரும் காய்கறிகள் வாங்க தேனிக்கு செல்வதாகக் கூறினா். ஆனால், அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், இவா்களிடமிருந்து ரூ.1. 54 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கேரளம் மாநிலம், ராஜகுமாரியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அப்போது, அந்த வாகனத்தில் வந்த பாபுவிடம் ரூ.80 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், உரம் வாங்குவதற்காக தேனிக்கு செல்வதாக கூறினாா். ஆனால், அந்தப் பணத்துக்கானஉரிய ஆவணம் இல்லாததால், ரூ.80 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.