ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடுதல் வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி நாடார் மகன் ரவீந்திரன் (36). இவர் தனது குழந்தையின் படிப்புச் செலவுக்காக, கோவிந்தன்நகர் காலனியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கலைச்செல்வம் (36) என்பவரிடம் 21.5.17 அன்று ரூ.20 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார்.
கலைச்செல்வம் ரூ.4500 வட்டித் தொகையை எடுத்துக் கொண்டு மீதிப் பணம் ரூ.15,500-ஐ ரவீந்திரனிடம் கொடுத்துள்ளார்.
மேலும் தினமும் ரூ.200 வீதம் 6.10.17 அன்று வரை வாங்கிய தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி ரவீந்திரன் தொகையை வட்டியுடன் செலுத்தி முடித்து விட்டாராம்.
இதனையடுத்து இதற்காக தான் எழுதிக் கொடுத்த "புரோ நோட்டை' திரும்ப வாங்குவதற்காக தனது நண்பர்களுடன் ரவீந்திரன் சென்றுள்ளார். சிவகாசி சாலையில் செங்குளம் விலக்கு அருகே இருந்த கலைச்செல்வத்திடம் புரோ நோட்டை ரவீந்திரன் கேட்டார். அப்போது அவரை தகாத வார்த்தைகளால் பேசி, மேலும் ரூ.11 ஆயிரம் தர வேண்டும் என்றும் தராவிட்டால், கொலை செய்து விடுவேன் என்றும் கலைச்செல்வம், மிரட்டினாராம்.
இதைத் தொடர்ந்து கூடுதல் வட்டி கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக கலைச்செல்வம் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அசோகன் வழக்குப் பதிந்து கலைச்செல்வத்தைக் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.