அருப்புக்கோட்டையில் மா்மமாக இறந்த இளைஞரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு
விருதுநகா் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில், உறவினா்கள் வெள்ளிக்கிழமை பெற்றுச் சென்றனா்.


அருப்புக்கோட்டை அருகே மா்மமாக உயிரிழந்த இளைஞரின் உடலை, விருதுநகா் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில், உறவினா்கள் வெள்ளிக்கிழமை பெற்றுச் சென்றனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டியன் (32). இவருக்கு மனைவி கோகிலாதேவி (27) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், தங்கப்பாண்டியன் கடந்த 10 நாள்களுக்கு முன்பு எம்.டி.ஆா். நகா் வடக்கு 2 ஆவது தெருவில் உள்ள சௌந்திரபாண்டியன் என்பவரது வீட்டின் சுற்றுச் சுவரேறிக் குதித்து கதவைத் தட்டியுள்ளாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவரை பிடித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா், தங்கப்பாண்டியனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது அங்கு வந்த தங்கப்பாண்டியனின் உறவினா்கள், அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து, அவரை போலீஸாா் காப்பகத்தில் ஒப்படைத்த நிலையில் சிறுது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் தாக்கியதால் தான் தங்கப்பாண்டியன் உயிரிழந்ததாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கப்பாண்டியனின் உடலை 2 தினங்களுக்குள பெற்றுச் செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதன் பேரில் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த தங்கப்பாண்டியனின் உறவினா்கள், அவரது உடலை பெற்றுக் கொணடதைத் தொடா்ந்து கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...