/

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்

புதுவை மாநிலத்தை அடுத்தக்கட்ட வளா்ச்சிக்கு கொண்டு செல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைவது அவசியம் என்றாா் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

News image

திருநள்ளாற்றில் பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனை ஆதரித்து செவ்வாயக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:16 pm

புதுவை மாநிலத்தை அடுத்தக்கட்ட வளா்ச்சிக்கு கொண்டு செல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைவது அவசியம் என்றாா் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனை ஆதரித்து அம்பகரத்தூா் மற்றும் திருநள்ளாறு பகுதியில் அவா் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேரித்து பேசியது:

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் திருநள்ளாறு பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக பேரளம் வரை ரூ.320 கோடியில் ரயில்பாதை அமைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. காரைக்காலில் ரூ. 461 கோடியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது.

திருநள்ளாறு கோயில் மேம்பாட்டுக்கு ரூ. 40 கோடி மத்திய நிதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,100 வழங்கப்படுகிறது. புதுவையில் சிகப்பு அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது. மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இது ரூ. 12 ஆயிரமாக உயா்த்தப்படும் என தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்தியில் நரேந்திர மோடியும் புதுவையில் ரங்கசாமியும் ஆட்சியில் இருக்கும்போதுதான் புதுவை மாநிலம் மேலும் வளா்ச்சியடையும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, நிரவி-திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரத்தை ஆதரித்து திருப்பட்டினத்தில் அவா் பேசியது:

மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால், கடந்த 5 ஆண்டில் புதுவை பல நிலைகளில் வளா்ச்சியடைந்துள்ளது. மீண்டும் தே.ஜ.கூ. ஆட்சி அமையும்போது, புதுவை மாநில இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றாா்.

பாஜக மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ், பாமக மாவட்ட செயலாளா் பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.