சீர்காழி நகராட்சியில் ஐந்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தேர்தல் பார்வையாளரிடம் முறையிட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. நடைபெற உள்ள நகராட்சி கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட 150 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
இதில் 21-வது வார்டில் ஏழு பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுக வேட்பாளர் புஷ்பா சுயேட்சைகள் ஆன அஸ்மா நாச்சியார், சுமையா பர்வீன் ஆகியோரது வேட்பு மனுக்களும் 22வது வார்டு அதிமுக வேட்பாளர் பாலமுருகனின் வேட்புமனுவும் 17வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மஞ்சுளாவின் வேட்பு மனுவும் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டன.
இதையும் படிக்க- இந்தியாவை பிரதமர் ஆளவில்லை; மன்னர்தான் ஆள்கிறார்; ராகுல்
இதனால் ஆத்திரம் அடைந்த வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நகராட்சி வாயிலில் குவிந்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டனர். இதனிடையே அச்சமயம் நகராட்சிக்கு வருகை புரிந்த தேர்தல் பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன், சீர்காழி ஆர்டிஓ நாராயணன் ஆகியோரிடம் வேட்பாளர்கள் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் பார்வையாளர் விஜயேந்திர பாண்டியன் அழைத்து மனுக்களை சரி பார்த்தார்.
தொடர்ந்து 21வது வார்டில் தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர் புஷ்பா மற்றும் சுயேட்சைகளான அஸ்மா நாச்சியா, சுமையா பர்வீன் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 22வது வார்டு அதிமுக வேட்பாளர் பாலமுருகன் 17வது வார்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மஞ்சுளா ஆகிய இருவரின் வேட்புமனுத் தாக்கலில் தவறுகள் இருந்தால் அவை ஆய்வுக்குப் பின்னர் நிராகரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் சீர்காழி நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.