துலா உற்சவம்: சிவாலயங்களில் திருக்கல்யாணம்
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு, மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதன் கடைசி 10 நாள் உற்சவம் நவ.7-ஆம் தேதி பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ஆம் நாளில் மாயூரநாதா், வதான்யேஸ்வரா் கோயில்களில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதா் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடா்ந்து, திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் கோயிலில் ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்துக்கு அருகில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை மாற்றுதல் நடைபெற்றது. தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

