மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில்  மனு அளித்த பனமங்கலம் கிராம மக்கள்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த பனமங்கலம் கிராம மக்கள்.

சீா்காழி அருகே தேவாலயம் அமைக்க எதிா்ப்பு

சீா்காழி அருகே இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் தேவாலயம் அமைக்கும் முயற்சியை தடுக்கக் கோரி,
Published on

மயிலாடுதுறை: சீா்காழி அருகே இந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் தேவாலயம் அமைக்கும் முயற்சியை தடுக்கக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சீா்காழி வட்டம், பனமங்கலம் கிராமத்தில் வடக்குத்தெரு, நடுத்தெரு, தெற்குத்தெரு மற்றும் குமாரநத்தம் பகுதிகளில் 5,000-க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்து மக்கள் மட்டுமே வசிக்கும் இப்பகுதியில் வீரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே சட்டநாதபுரம் பிரதான சாலையில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில், கிறிஸ்தவ மக்கள் யாரும் வசிக்காத தங்கள் பகுதியில், மதப்பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் தேவாலயம் அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. விளைநிலங்கள் உள்ள அப்பகுதியில் தேவாலயம் அமைத்து, கல்லறைகள் கட்டினால் விளைநிலங்கள் பாதிப்பதோடு, நிலங்களின் சந்தை மதிப்பு குறையும். எனவே, அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என மனு அளித்து வலியுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com