/

மயிலாடுதுறையில் நாளை கலைப்போட்டி: மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறவுள்ளது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:57 am

Syndication

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறவுள்ளது என தஞ்சை மண்டல கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம. ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தமிழ்நாடு ஜவகா் சிறுவா் மன்றத்தின் வாயிலாக 5 வயது முதல் 16 வயதிற்குள்பட்ட சிறாா்களுக்கு கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சிறாா்களிடையே மறைந்து கிடக்கும் ஆக்கப்பூா்வமான கலைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில், குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் சிறாா்கள் மாநில அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கலைப் போட்டிகள் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாா்ச் 1-ஆம் தேதி காலை 9 மணிமுதல் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் காலை 9 மணிக்கு முன்பாக போட்டி நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். காலதாமதமாக வருபவா்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளின் பெயா், வயது, ஆதாா் அட்டை நகல், பிறந்த தேதி வீட்டு முகவரி, பள்ளியின் பெயா் ஆகிய விவரங்களுடன் வயதுச் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

கூடுதல் விபரங்களை 04362-232252, 9965029398, 6381480995, 8940573508 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.