சீர்காழி: சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.
ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி, பிளாஸ்டிக் நெகிழி பொருள்கள் தனியே சேகரித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய பணிகளை தூய்மைப்பணி முகாமில் சுமார் 90-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு முகாமை சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்று பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம், நகரை தூய்மையாக வைத்துக் கொள்வோம், நீர்நிலைகளை பாதுகாப்போம், குப்பைகளை அதற்குரிய இடங்களில் கொட்டுவோம் என்பது போன்ற ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நெகிழி ஒழிப்பு முன்னெடுக்கும் விதமாகவும், மஞ்சள் பை பயன்படுத்துவதை வலியுறுத்தி கடைகளில் எம்எல்ஏ பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ஆகியோர் மஞ்சள் பை வழங்கினர்.