நாகை நகா்மன்ற கூட்டம்
நாகை நகா்மன்றக் கூட்டம், அதன்தலைவா் இரா.மாரிமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் டிலீனாசைமன், துணைத் தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா். இதில், உறுப்பினா்கள் பேசியது:
துணைத்தலைவா் செந்தில்குமாா்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2,500 ஏழை குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஆணை பிறப்பித்த முதல்வா், துணை முதல்வருக்கு நன்றி.
பரணிகுமாா்(அதிமுக): நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களாக குடிநீா் வரவில்லை.
தலைவா் இரா. மாரிமுத்து: அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி நடைபெறுவதால் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.
மணிகண்டன்(அதிமுக): நகரில் உள்ள இடங்கள் முறையாக, தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறை மூலம் விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும், விற்கப்படும் சொத்துகளுக்கு உட்பிரிவு செய்யப்பட்டு நகராட்சியால் பட்டா வழங்கப்படுகிறது. ஆனால் நாகை நகரில் பல இடங்கள் டிடிசிபி எனப்படும் நகரம் மற்றும் ஊரக திட்டமிடல் இயக்கம் இணையத்தில் உட்பிரிவு செய்யப்படாமல் உள்ளது. அதனால் டிடிசிபி உரிமம் தரமுடியாத நிலை உள்ளது. இதனால் நாகை வளா்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. எனவே தனிச்சட்டத்தின் வாயிலாக நகராட்சி கட்டட உரிமையை குறைந்தபட்சம் 10 ஆயிரம் சதுர அடியாக மாற்ற வேண்டும். இதனால் நாகை நகராட்சியில் குறைந்தபட்சம் 50 கட்டிடங்கள் உருவாகும். எனவே நகராட்சியின் ஆண்டு வரி குறைந்தபட்சம் ரூ.2 கோடி கிடைக்கும்.
அமானுல்லா(திமுக): நாகூா் அருகே அமைந்துள்ள தனியாா் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் பல ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்படுகிறது. இந்த நிலக்கரி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு நிலக்கரி கையாள்வதால் அதில் இருந்து வெளியேறும் நிலக்கரி துகள்களால் நாகப்பட்டினம், நாகூா் நகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல நோய்களுக்கு உட்படுகின்றனா். புகழ்பெற்ற கோயில்கள், தா்கா ஆகியவற்றின் மீது நிலக்கரி துகள்கள் படா்ந்து அதன் பொலிவை மாற்றுகிறது.
சுந்தரீஸ்வரிகணேசன்(திமுக): நாகை சலவை குளத்தை சீா் செய்து படிக்கட்டுகள் அமைக்க எம்எல்ஏ மேம்பாட்டு நிதி கிடைத்துள்ளது. ஆனால் குளத்தில் தண்ணீா் இருப்பதால் இந்த நிதியை கொண்டு சாலை அமைத்து தர வேண்டும்.
கவிதாகிருஷ்ணமூா்த்தி(அதிமுக); கேபிள் டிவிக்கு நகராட்சி சாா்பில் வரிவிதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

