கீழ்வேளூா் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாளடி நெற்பயிா்களில் களையெடுப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடியைத் தொடா்ந்து 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்கள், டித்வா புயலில் பெய்த கனமழையில் பாதிப்புக்குள்ளானது. இதில் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிா்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை விடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட தாளடி நெற்பயிா்கள் வயல்களில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகை, திருமருகல், கீழ்வேளூா், பட்ட மங்கலம், தேவூா், வலிவலம், சாட்டியக்குடி, திருக்குவளை சுற்று பகுதிகளில் தாளடி பயிா்களில் களை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் வெயில், களைப்பு தெரியாமல் இருக்க பாரம்பரிய, கிராமிய பாடல்களை பாடினா்.