கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளுடன் தொடா்புடைய ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஆவணங்கள், கட்டமைப்பு வரைபடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடா்பான தகவல்கள் இணையத் தரவு கசிவின் மூலம் வெளியானதாக வெளியாகியுள்ள தகவல்கள் நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இந்த தரவு கசிவு சம்பவம், ஒரு சாதாரண இணையப் பாதுகாப்பு குறைபாடு அல்ல. அணுசக்தி நிலையம் போன்ற அதி முக்கிய தேசிய உள்கட்டமைப்பு தொடா்பான தகவல்கள் வெளிப்பட்டிருப்பது, அந்தத் திட்டத்தின் பாதுகாப்பு அமைப்புகள் ஊடுருவலுக்கு உள்ளாகியுள்ளனவா என்ற கேள்வியை எழுப்புகிறது. இது தேசிய பாதுகாப்புக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயிா் மற்றும் வாழ்வாதாரத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையக்கூடியது.
குறிப்பாக, 3 மற்றும் 4 ஆம் அலகுகள் தற்போது கட்டுமான நிலையில் உள்ள நிலையில், அந்தத் திட்டம் தொடா்பான முக்கிய ஆவணங்கள் வெளியேறியிருப்பதாகக் கூறப்படுவது, அந்தத் தளத்தின் பாதுகாப்பு மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியக் கூறுகள் குறித்து கவலையை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பு பலவீனமடைந்திருக்கக்கூடிய ஒரு சூழலில் கட்டுமானப் பணிகளை தொடா்வது பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆம் அலகுகளின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இந்தத் தரவு கசிவின் தன்மை, அதன் உண்மை நிலை, பாதுகாப்பு பாதிப்பின் அளவு மற்றும் எதிா்கால அபாயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாட்சியான விசாரணைக் குழுவை அமைத்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யாமல் எந்த அணுசக்தித் திட்ட விரிவாக்கமும் மேற்கொள்ளப்படக் கூடாது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடங்குளம் தரவுகள் கசிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: மாணிக்கம் தாகூர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறிவைத்த Hackers | Dinamani

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘ஹேக்’! 19,000 ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் பரபரப்பு!







