தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்

குட்கா ஊழலில் சிக்கியுள்ள தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி தே.க. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றார்

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

குட்கா ஊழலில் சிக்கியுள்ள தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக டிஜிபி தே.க. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் இரா. முத்தரசன். 
திருத்துறைப்பூண்டியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு கால் நூற்றாண்டு வரை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 
சோனியகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவர்களை மன்னித்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் தமிழக அரசு இதுகுறித்து முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ள தீர்ப்பை பயன்படுத்தி உடனடியாக காலதாமதமின்றி அவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். 
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயிகள் தவித்து வந்த நிலையில், தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட  வெள்ள உபரிநீர், கடலில் வீணாக கலந்தது. போதிய நீர் வந்தும் கடைமடை பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மேற்கொண்ட சம்பா  பயிர்கள் கருகி வருகிறது. தண்ணீர் இருந்தும் பயிர்கள் கருகி வருவது வேதனையளிக்கிறது. முக்கொம்பில் உடைந்த மதகுகள் 3 நாள்களில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் கூறி பல மூன்று நாள்கள் ஆகிவிட்டன. உடனடியாக உடைப்பை சீரமைக்காவிட்டால் தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிக்கும்.
மறைந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 2013-ஆம் ஆண்டு போதை பொருளான குட்கா தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை தடையின்றி கிடைத்து வருகிறது. சிபிஐ சோதனையில் ஈடுபட்டு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி தே.க. ராஜேந்திரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை செய்து சிலரை கைது செய்துள்ளது. எனவே, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் அவர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும். 
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆ.கே.நகர் பணப்பட்டுவாடா மற்றும் குட்கா ஊழல் குறித்து சோதனை நடைபெற்றுள்ள நிலையில் அவர் தாமாகவே முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வழக்கை சந்திக்க வேண்டும். டிஜிபி  ராஜேந்திரன் சட்டம் ஒழுங்குக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலையில் தற்போது அவரது வீட்டில் மற்றும் அலுவலகத்தில் சோதனை  நடைபெற்றுள்ளது. ஆனால், அவர் பதவியில் இருப்பது வியப்பாக உள்ளது. எனவே,  அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை உடனடியாக நீக்க வேண்டும். 
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதைப் பணியை விரைந்து முடித்து சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை , நாகை, திருவாரூர் மாவட்ட மக்களின் குறைகளைப் போக்க, நிகழாண்டு இறுதிக்குள் ரயில் சேவையைத் தொடங்க தென்னக ரயில்வே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் முத்தரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.