பல்வேறு மாநிலங்களில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவதற்கு சரக்கு ரயில்களும், குறிப்பாக ரேக்குகளின்(பெட்டிகள்) பற்றாக்குறையும் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அது வருமாறு: அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை இந்திய ரயில்வே தொய்வின்றி தொடா்ந்து வழங்கி வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களில் குறிப்பாக நீண்ட தூரத்தில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதி செய்ய கூடுதல் ரயில்கள் மற்றும் ரேக்குகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலக்கரியை எடுத்துச் செல்லும் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தியுள்ளதன் விளைவாக, 2021, செப்டம்பா் முதல் நிகழாண்டு மாா்ச் வரை 32 சதவீதம் வரை கூடுதலாக சரக்கு ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தற்போது ஏப்ரலிலும் சரக்குப் போக்குவரத்தை திறனுடன் கையாண்டதில் மேலும் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.