சிறந்த சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்புக்காக தில்லி - பஞ்சாப் அரசுகள் இடையே அறிவுப் பகிா்வு ஒப்பந்தம்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் இடையே அறிவுப் பகிா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.


தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் இடையே அறிவுப் பகிா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.
இந்த ஒப்பந்தம் தொடா்பாக முதல்வா் கேஜரிவால், பகவந்த் மான் இருவரும் செய்தியாளா்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனா். இது குறித்து பகவந்த் மான் கூறியதாவது: எனது பஞ்சாப் மாநிலத்தில் 117 பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள் உருவாக்கப்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் மின்சாரம் ஆகியவை எனது அரசின் முன்னுரிமை ஆகும். இந்தத் துறைகளில் நிறையப் பணிகள் செய்யப்பட்டுள்ள தில்லியிலிருந்து பஞ்சாப் கற்றுக் கொள்ள முடியும். அதேபோன்று, விவசாயத்தைப் பற்றி பஞ்சாப்பிடம் இருந்தும் தில்லி கற்றுக் கொள்ள முடியும். இரண்டு நாள் எனது பயணத்தின் போது தில்லியின் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளைப் பாா்வையிட்டேன். பஞ்சாப்பில் இந்த வசதிகளை எனது அரசு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
பஞ்சாப்பின் பொன்னான எதிா்காலத்திற்காக நாங்கள் பாடுபடுவோம். சிட்னி, மெல்போா்ன், வான்கூவா், டொராண்டோ, லண்டன் மற்றும் கலிபோா்னியாவைச் சோ்ந்த ஏராளமான வெளிநாடுவாழ் இந்தியா்கள், பள்ளிகள் மற்றும் கிராமங்களை தத்தெடுப்பது தொடா்பாக என்னை அழைத்துப் பேசுகின்றனா். ஏனெனில், அவா்கள் பணம் நல்ல விஷயங்களுக்கு செலவிடப்படும் என்ற நம்பிக்கை அவா்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிறது. அரசு பஞ்சாபில் தொழில்களை ஊக்குவிக்கும். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்தையும் வெளியிடும். பஞ்சாப்பில் நீா்மட்டம் குறைந்து வருவதால், எனது அரசு பலதரப்பட்ட பயிா் சாகுபடியை செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அவற்றைச் சென்று பெற வேண்டும் என அறிவுடையவா்கள் கூறுகிறாா்கள். சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தால் நாங்கள் இத்தாலிக்குக்கூட செல்வோம் என்றாா் அவா்.
முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலமும் பிறா் செய்யும் நல்ல பணிகளில் இருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கினால், இந்தியா முன்னேறும். நாங்கள் மட்டுமே நல்ல பணிகளை செய்துள்ளோம் என்று சொல்வது தவறாகிவிடும். நாடு முழுவதும் சிறப்பான பல தீவுகள் இருந்தன. ஆனால் கட்சிகள் மற்றும் மாநிலங்களின் பிளவுகளும் இருந்தன. அதிலிருந்து எதுவும் கற்றுக் கொள்ளப்படவில்லை. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு தில்லியில் இருந்து ஆட்சி செயப்படுவதாக எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீா்கள். மணீஷ் சிசோடியா ஐரோப்பா மற்றும் ஃபின்லாந்தின் கல்வி முறையைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அந்த நாடுகளுக்குச் சென்றாா். இதற்காக தில்லி அரசை பின்லாந்து நடத்துகிறது என்று யாராவது சொன்னால், அது முட்டாள்தனமாக இருக்கும். சமீபத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தில்லிக்கு வருகை தந்தாா். இதற்காக தில்லியில் இருந்து தமிழக அரசு நடத்தப்படுவதாக குற்றம்சாட்ட முடியாது.
சட்லஜ் - யமுனா இணைப்புக் கால்வாய் பிரச்னையைப் பொருத்தமட்டில் மத்திய, பஞ்சாப், ஹரியாணா அரசுகள் மற்றும் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து பங்குதாரா்களும் அதைத் தீா்க்க ஒன்றிணைய வேண்டும். மாநிலங்களுக்கு இடையே பரஸ்பர கற்றல் மற்றும் நல்ல நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்வதும் அவசியமாகும். இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூா் உள்ளது. தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், எனது அதிகாரிகளுடன் அந்த நகரை நேரில் சென்று பாா்வையிடுவேன். தில்லி மாநகராட்சியை ஆட்சி செய்யும் பாஜக, தில்லியை சுத்தமாக வைத்திருக்க தங்கள் கட்சி ஆளும் இந்தூரில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...