அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், பி.பெஞ்சமின் ஆகியோர் புதன்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
முன்னதாக, "ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தைத் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்' என்று கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தத் தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும், ஆனால், ஏற்கெனவே செயற்குழு ஒப்புதல் அளித்த 23 தீர்மானம் தவிர பிற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பொதுக் குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் ஆர்.விஸ்வநாதன் (தற்போது எம்எல்ஏ மற்றும் அமைப்புச் செயலாளர்), பி.பெஞ்சமின் (திருவள்ளுர் மத்திய மாவட்ட அதிமுக செயலர் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்) ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தனித் தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நத்தம் ஆர்.விஸ்வநாதன் தரப்பில் வழக்குரைஞர் வினோத் கண்ணா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.